Saturday, July 23, 2011

இனி பெட்ரோலே தேவையில்லை!

தனது நீண்ட ஆராய்ச்சியின் பயனாக செல்வா பெட்ரோல் இல்லாமல் மின்சாரத்தால் இயங்கும் வண்டியைக் கண்டுபிடித்தேவிட்டார்.

இதுவரை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் செல்வாவின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருந்தன. பெட்ரோல் இல்லாமல் ஓடுகின்ற வண்டியைக் கண்டுபிடிப்பதென்பது சாதாரண விசயமல்லவே!

உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் செல்வாவின் பெட்ரோல் இல்லாமல் ஓடும் வாகனத்தைப் பார்க்க ஆவலுடன் வந்துகொண்டிருந்தனர்.

செல்வா தனது வாகனத்தினைப் பார்வைக்கு வைத்திருந்தார். அது இயங்குவதற்கு பெட்ரோல் எதுவும் தேவைப்படாது என்றும் மின்சாரம் மட்டுமே போதுமானது என்றும் விளக்கிகொண்டிருந்தார்.

ஊர்ப்பொது மக்களும் ஆராய்ச்சியாளர்களும் செல்வாவின் வாகனத்தை அதிசயமாகப் பார்த்துகொண்டிருந்தனர்.

அப்பொழுது இது எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியாளர் செல்வாவிடம் கேட்டார்.

" இது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடியது , இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் அனைத்து வாகனங்களும் சிறிது நேரத்திற்கே மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடியது. ஆனா என்னோட இந்த வாகனம் நீண்ட நேரத்திற்கு இயங்கும். அதனால எங்க போறதுனாலும் நீங்க இத நம்பி போலாம்! " என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகச் சொன்னார் செல்வா.

" அதுக்கு எவ்ளோ நேரம் சார்ஜ் போடணும் ? " என்றார் மற்றொருவர்.

" சார்ஜ் போட வேண்டியதில்லை , நம்ம வண்டிக்குப் பக்கத்துல இன்னொரு வண்டி இருக்கு பாருங்க அதுல ஒரு ஜெனரேட்டர் இருக்கும் அதுல இருந்துதான் இதுக்கான கரண்ட் வருது! "

" அப்ப அதுக்கு பெட்ரோல் ஊத்தனும்ல ?"

" கண்டிப்பா அதுக்கு ஊத்தித்தான் ஆகணும்! "

" அப்புறம் இது என்ன பெரிய கண்டுபிடிப்பு, நமக்கு அதிகமா செலவுதானே ஆகுது ?" என்று குழப்பமாகக் கேட்டார் அந்த நபர்.

" இந்த வண்டிய மட்டும் நீங்க வச்சிட்டு , அந்த வண்டிய வேற ஒருத்தருக்கு வித்திடுங்க , இப்ப நீங்க அதுக்கு பெட்ரோல் ஊத்த வேண்டாம்ல! " என்று தனது அறிவாளித்தனத்தை நிலைநாட்டினார் செல்வா.

நன்றி:- http://selvakathaikal.blogspot.com/

No comments:

Post a Comment