Friday, August 19, 2011

நகரத்துடன் பழகுதல்




ஒவ்வொரு இரவும்
புள்ளிகளை மாற்றிக் கொள்ளும்
புலி போல
நகரம்
தன்னை
மாற்றிக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு நாளும்
அதனுள் நாம் 
அறிந்த வழிகள் அழிந்து
அறியாப் புதுவழிகள்
முளைத்து
வந்து கொண்டே இருக்கின்றன.

நேற்றைய சொற்களை
உதிர்த்து
எப்போதும் 
புதிய சொற்களை
பிரசவித்துக் கொண்டே இருக்கிறது
நகரம்..
மீதமுள்ள சொற்களின்
அர்த்தங்களும் 
நள்ளிரவில்
மாறிக் கொண்டே இருக்கின்றன.. 
ஒருநாள் விலகினாலும்
புதிதாய் கண்டவர் போல் 
மனிதர்களைத்
திரும்பவும் திரும்பவும்
அறிமுகம்
செய்துகொள்ள வேண்டியிருக்கிறது..
நகரத்தில் எதுவும்
நிரந்தரமில்லை.
எதுவும் 
இலவசமில்லை..
எல்லாப் புன்னகைகளின்
பின்பும்
நிச்சயமாய்
ஒரு வியாபாரம் இருக்கிறது..
ஏன்
ஒவ்வொரு கண்நீர்த்துளியின்
அடியில்கூட...
முற்றிய
நகர மனிதன் கூட
ஒரு பொழுதும்
கையுறைகள் இல்லாமால்
அதனுடன் 
கைகுலுக்க
முடிவதே இல்லை..
எவ்வளவு பழகினாலும்
அறியாத மிருகம் போல
அச்சத்துடனே 
அணுகவேண்டி இருக்கிறது 
இன்னும்
நகரத்தை...
                     - போகன் 

No comments:

Post a Comment